எங்கள் பண்ணையில் ஒரு பரிசோதனை முயற்சியாக கால்நடைகளுக்கான தீவனபயிர் விவசாயமுறையில் செய்து பார்த்தோம்.சிறப்பாக உள்ளதை அனுபவமாக உணர்கிறோம்.
ஏனைய கால்நடைப்பண்ணையாளர்களும் இதை முயற்சிக்கலாம்.
கோ-4 அல்லது கோ-5 தீவனப்பயிர் விவசாயம் செய்யும் நிலத்தில் 3 முதல் 3.5 அடி பார் எடுத்து விவசாயம் செய்வோம்.இதன் இடையில் 1 முதல் 1.5 அடி இடைவெளியில் வேலிமசால் விவசாயம் செய்யலாம் இது சிறப்பாக பலன் கொடுக்கிறது.

பொதுவாக கோ-4 அல்லது கோ-5 விவசாயம் செய்ய மேற்கண்ட இடைவெளியைத்தான் அனைவரும் பின்பற்றுவார்கள்.அதுதான் சிறப்பும் கூட.ஆகையால் அந்த அளவு இடைவெளியில் பார்களுக்கு இடையே வேலிமசால் நடவுசெய்யும் போது எவ்விதத்திலும் கோ-4 தீவனத்தின் வளர்ச்சி பாதிப்பதில்லை. மேலும் கோ-4 வேலிமசால் வளர்ச்சியையும் எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆகையால இரண்டும் சிறப்பாக வளர்கிறது.

உதாரணத்திற்கு 1 ஏக்கரில் கோ- 4 பயிரிடும் போது நமக்கு கிடைக்கும் திவனத்தின் அளவு எப்போதும் போல் கிடைப்பதுடன் கூடுதலாக வேலிமசால் சுமார் ½ ஏக்கர் அளவிற்கு கிடைக்கிறது.
இதனால் கிடைக்கும் பலன்கள்:

·         குறைந்த பரப்பளவில் மிகுந்த உற்பத்தி.

·         செலவுகள் குறைவு, அதாவது ஏர் உழு செலவு, களைக்கட்டுப்பாட்டால் பராமரிப்பு செலவு, நீர்பாசனத்திற்கு ஆகும் நேர விரையம், இடுபொருள் செலவு, மொத்தத்தில் பராமரிப்புக்கு ஆகும் செலவு என பலவகையில் சிக்கனமாக உள்ளது.

·         பொதுவாக கால்நடைப்பண்ணையாளர்கள் செடிவகை தீவனத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை.கோ- 4 தீவனத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற பயிர்களுக்கு கொடுப்பதில்லை.அதில்தான் செடிவகையான வேலிமசால் அடங்கும்.கால்நடைகளுக்கு பொதுவாக புரத சத்து அதிகம் தேவைப்படுகிறது.குறிப்பாக பால் பெருக்கவும் தனது வளர்ச்சிக்கும்.இந்த புரத சத்து தாவர பச்சை தீவனமாக கொடுப்பதிலேயே வேலிமசாலில் ஒப்பீட்டு அளவில் அதிகமாகவே உள்ளது. ஆகையால எந்த அளவிற்கு வேலிமசால் பச்சை தீவனத்துடன் கலந்து கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு கால்நடை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
            
               (புகைப்படம் காவேரி பண்ணை)






ஆகையால் கால்நடைப்பண்ணையாளர்கள் பல அதிக உற்பத்தி கொடுக்கும் கோ-4 உடன் இதையும் ஊடுபயிராக விவசாயம் செய்யலாம் மிக எளிமையாக.

இதையே தனியாக விவசாயம் செய்ய தனி நிலம், உழவு, பராமரிப்பு, இடுபொருள், களை பராமரிப்பு என அனைத்தையும் தனியாக மேற்கொண்டு பணவிரையம் , கால விரையம் ,சக்தியை விரையம் செய்ய வேண்டும். இது புதிய சிறிய விவசாய உத்தி அவ்வளவே…..

முயற்சித்துவிட்டு கருத்துகளை பகிருங்கள். இன்னும் நுட்பங்களை அதிகமாக அப்போது விவாதிப்போம்….நன்றி.