ஒரு பண்ணையாளர் வெற்றிப்பெருவதையும் தோல்வி அடைவதையும் நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாக எப்போதும் இருப்பது பசும்தீவன விவசாயம்.


     இந்த பசும்தீவன வகைகளில் அதிக புரதம் அடங்கிய பசும் தீவனங்களில் ஒன்றுதான் வேலிமசால் ஆகும். இது ஒரு பயறு வகையை சேர்ந்தது ஆகும். ஏனைய பசும் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் ஏனைய சில சத்துக்கள் மற்றவற்றை ஒப்பீடும் போது அதிகம் உள்ளது. ஆகையால் கால்நடைகளுக்கு இது மிக அத்தியவாசமானதாக உள்ளது.

  வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள்

·             பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்

·            அதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.

·             ஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை     உடையது.

·             ஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.

·             வருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல்            கிடைக்கும்.

·             வருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது.

·             வருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்.

·             பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.






(புகைப்படங்கள் : காவேரி பண்ணை)

        இவ்வளவு சிறப்பான பசும் தீவனத்தை எங்கள் பண்ணை அனுபவத்தில் பல கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் புரிந்துக்கொண்டு விவசாயம் செய்து கால்நடைகளுக்கு கொடுத்து சிறப்பாக வளர்க்கின்றார்களா? என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றும் அனுபவமாக உள்ளது.

     இதில் பல பிரச்சனைகள் இருக்கலாம் ஆனாலும் அதை கடந்து இதை நாம் செய்ய வேண்டும் இல்லை என்றால் நிச்சயமாக உங்களால் நீண்டகாலத்துக்கு வெற்றிகரமான பண்ணையாளராக திகழமுடியாது.

     சரி தற்போது பெரும்பான்மையான பண்ணையாளர்கள் செய்யும் தவறுகளை என்ன என்று பார்த்தோம் என்றால்,
முதலில் தீவன விவசாயம் என்றாலேயே முதலில் நம்மவர் செய்யும் ஒரே காரியம் கோ4 ,கோ5 வகை நேப்பியர் வகை புற்களை வாங்கி பயிறிட்டு பண்ணையை ஆரம்பித்துவிடுவார்கள்.
    
     ஏனென்றால் இதுதான் மிக அதிகமான அளவுக்கு ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விளைகிறது, மற்றவற்றை ஒப்பீடு செய்யும் போது. ஆகவே அதிகமாக கிடைப்பதால் அதிக கால்நடைகளை வளர்க்களாம். அதனால் அதிக வருமானம் கிடைக்கும் என்று நம்மவர்கள் எண்ணுவதாலும் மேலும் பண்ணை வைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்குபவர்கள் முழுமையான சரியான அறிவியல் முறையிலான வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்காததும் அதை முழுமையாக தெரிந்துக்கொண்டு பண்ணை ஆரம்பிக்கும் அறிவியல் பூர்வ சிந்தனாமுறை நம்மவர்களிடம் மிகக்குறைவாக இருப்பதும் இப்பிரச்சனைக்கு காரணம் ஆகும்.

     மிகவிலைக்குறைவான, புரதச்சத்துகள் மற்றும் ஏனைய சத்துக்கள் அடங்கிய வேலிமசாலில் உள்ளது போன்று  கோ4,கோ5 வில் சத்துக்கள் கிடைக்காமல் கால போக்கில் கால்நடைகளுக்கு சத்துப்பற்றாக்குறை மற்றும் அதைத்தொடர்ந்து பண்ணையில் ஏற்படும் தொடர்புடைய தொடர் பிரச்சனைகளால் பண்ணையாளர்கள் தோல்வியை சந்திக்கின்றனர். இதில் இருந்து மீள நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீவனங்கள், இணை உணவுகள் மற்றும் மருந்துகளை நம்பி கால்நடைகள் உயிர்வாழ வேண்டிய சூழலில், நீண்ட காலத்திற்கு பொருளாதார ரீதியான தோல்வியை பண்ணையாளர் சந்திக்கின்றார்.

     ஆகவே புதிய கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் பழைய கால்நடைப் பண்ணையாளர்கள் ஆகிய இருவருமே மேற்கண்ட தவறுகள் இழைப்பதை பார்க்க முடிகிறது.

     இதற்கு உள்ள தீர்வுகளில் நாங்கள் ஒரு வழியாக வேலிமசால் பசும் தீவன விவசாயத்தை பார்க்கிறோம். இதை அனுபவமாகவும் கூறிகிறோம். விலைக்குறைவான , நீண்ட காலத்தில் நம் நிலத்தில் இருந்தே விவசாயம் செய்து கொண்டு, நல்ல தரமான உணவை நம் கால்நடைகளுக்கு வழங்கமுடியும். மேலும் இதே போன்று புரதம் அதிகம் உள்ள அகத்தி, சவுண்டல் (அ) சூபாப்புல், கிளரிசெடியா ஆகிய மரங்களையும் நாம் எந்த அளவிற்கு அதிகமாக கால்நடைகளுக்கு கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு நல்ல தரமான கால்நடைகளை குறைவான பராமரிப்பு செலவோடு வளர்க்கலாம். நாமும் நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வெற்றிகரமான பண்ணையாளராக திகழலாம்.

குறிப்பு: மேற்கண்ட கட்டுரை கவேரி பண்ணையில் அனுபவ உழைப்பின் மூலம் அறிந்தது ஆகும்.